Tuesday 5 September 2017

Neet2

இன்றைய தீக்கதிரில், எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதியுள்ள " அஸ்வின்களும் அனிதாக்களும்" கட்டுரை, மிகவும் முக்கியமானது. அவசியம் படிக்கவேண்டியது.

ஒடுக்கப்படுபவர்களின் தொடர் சங்கிலியில். அனிதா ஒரு கண்ணி..... 

அஸ்வின்களும் அனிதாக்களும்!- சு. வெங்கடேசன்

அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதாவை நாம் அறிவோம். அனிதாவின் மரணத்தை புரிந்து கொள்ள அஸ்வினை நாம் அறிந்து கொள்வது அவசியம். மருத்துவம் என்ற அறிவுத்துறை சார்ந்த செயல்பாட்டுக்காகத்தான் அஸ்வின்களும் அனிதாக்களும் பலியாக்கப்பட்டார்கள்.

அஸ்வின் அனிதாவைப்போல சுமைப்பணியாளர் வீட்டிலே பிறந்தவன் அல்ல, இன்னும் சொல்லப்போனால் அஸ்வின் மனிதனே அல்ல, அவன் கடவுள். அப்படித்தான் அழைக்கப்படுகிறான். தெய்வத்தோடு தெய்வமாக வைத்து போற்றப்பட்ட ஒருவனுக்கும், ஏழை மாணவி அனிதாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருவரும் மருத்துவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள். அதன் பொருட்டே பலியாக்கப்பட்டவர்கள். ரிக்வேதத்தைப் பாடிய ஆதிக்கவிஞர்கள் அஸ்வினை பெரிதும் போற்றுகிறார்கள். காரணம் அவனது மருத்துவ ஆற்றல். அவன் மருத்துவம் பார்ப்பதால் மனிதனின் அன்பைப்பெற்றவனாக இருக்கிறான். அதனால் தேவர்களுக்கும் மருத்துவம் பார்ப்பவனாக போற்றப்படுகிறான். பின்னர் தேவர்களின் மருத்துவராகவும் வர்ணிக்கப்படுகிறான்.

இந்த ரிக்வேத கதையின் தொடர்ச்சி தான் மகாபாரதத்தில் மருத்துவ ஞானம் பெற்றவர்களான நகுலனும், சகாதேவனும் அஸ்வினி புத்திரர்கள் என்று அழைக்கப்படுவது.ஆனால் அஸ்வினுக்கு இந்த நல்ல பெயர் நீண்ட காலம் நீடிக்கவில்லை. நால்வர்ண கோட்பாடு வலிமை பெற்றதும் அதன் தாக்குதலுக்கு மனிதர்கள் மட்டுமல்ல தெய்வங்களும் தப்பவில்லை.

வேதத்தில் மிகப்பிந்தியதான யஜூர்வேதம் சொல்கிறது. ”பிராமணர்கள் மருத்துவத்தில் ஈடுபடலாகாது”. ஏனென்றால் மருத்துவன் புனிதமற்றவன், யாகத்துக்கு தகுதியற்றவன். எனவே பிராமணன் அத்தொழிலினை செய்யக் கூடாது எனச்சொல்லுகிறது.

மருத்துவன் ஏன் புனிதமற்றவன்? என்று கேட்டால் அதற்கும் யஜூர்வேதம் சொல்லுகிறது, மருத்துவத் தொழில் எல்லோருடனும் பழகுகிற, எல்லோரையும் சிகிச்சையின் பொருட்டு தொட்டுப்புழங்குகிற தொழில். அது வர்ணக்கோட்பாட்டுக்கு எதிரானது என்பதால் மருத்துவனை தனது கோட்பாட்டின் படி புனிதமற்றவன் என்று முடிவு கட்டுகிறது.

இங்கு தான் புதிய பிரச்சனையை அது சந்திக்கிறது. அப்படியென்றால் தம் முன்னோர்கள் தேவர்களிலே மருத்துவ ஆற்றல் கொண்ட தேவராக அஸ்வினை சொல்லியுள்ளனரே. அவரை என்ன செய்வது? மருத்துவத் தொழிலே கேவலமானது, தீட்டானது என்ற முடிவுக்கு வந்த பின் அத்தொழிலை தேவர்களில் ஒருவன் எப்படி பார்க்க முடியும்? இந்த கேள்விகளோடு அஸ்வினை அணுகுகிற யஜூர்வேதம் வெளிப்படையாக அஸ்வின் மீது தாக்குதல் தொடுக்கிறது. அத்தாக்குதலின் உச்சமாக அது அறிவிக்கிறது “தனது மருத்துவத் தொழில் காரணமாக அஸ்வின் தேவர்களில் ஒருவன் என்ற தகுதியை இழக்கிறான்”. அதன்பின் அஸ்வின் அழித்தொழிக்கப்பட்டு விடுகிறான்.மருத்துவம் பார்க்கும் மனிதனின் மீதும், தெய்வத்தின் மீதும் இவ்வளவு கடுமையான தாக்குதலை தொடுப்பதற்கான காரணத்தை யஜூர் வேதம் சொல்லுகிறது. “எல்லாவகையான மனிதர்களும் மருத்துவர்களை நோக்கி ஓடுகிறார்கள்”. அதுதான் இந்தக் கோபத்தின் அடிப்படை.

சரி. இதற்காக ஏன் யஜூர் வேதாந்திகள் மருத்துவர்களின் மீது இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்த வேண்டும் என்று கேட்டால், மருத்துவன் உடலை மையப்படுத்தி தனது பகுத்தறிவால் வினை புரிகிறான். பாவ புண்ணியம், அதிர்ஷ்டம் துரதிஷ்டம், மாயாவாதம் என எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டு கண்ணுக்கு முன்னால் இரத்தம் வலியும் காயத்துக்கு மருந்துகட்டி சரிப்படுத்துகிறான்.

உலகம் நான், அண்டசராசரம் நான், நீயும் நான், அவனும் நான். புண்ணும் நான் மருந்தும் நான் என்று வியாக்கியானம் பேசுவோருக்கும் எதிராகத்தான் மருத்துவ அறிவியலின் ஒவ்வொரு செயலும் இருந்தது. எனவே அவ் அறிவியலை ஒழிப்பதே அடுத்து வந்த மதவாதிகளின் தலையாய கடமையாக இருந்தது.

இந்திய வரலாற்றில் மருத்துவர்களின் மீதும், மருத்துவ அறிவின் மீதும் கொடூரமான தாக்குதல் அதன் பின் அரங்கேறத்துவங்கின. தர்மச் சட்டங்கள் என்ற பெயரில் எழுதப்பட்ட எல்லா சட்டங்களும் மருத்துவர்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தையே கொண்டிருந்தது.

அபஸ்தாம்பர் எழுதிய சட்ட நூல் “மருத்துவன் அல்லது அறுவையாளன் தருகிற உணவு அருவருக்கத்தக்கது, அதனை உயர்ஜாதியை சேர்ந்தவர்கள் ஏற்கலாகாது” என்று கூறுகிறது. வசிஷ்டரின் சட்ட நூலோ “மருத்துவன் தரும் உணவை ஏற்பது விலைமகளீர் தரும் உணவைப் போல அசுத்தமானது” என்கிறார். இந்தப் போக்கின் உச்சத்தை மநுவின் சட்டநூலிலே பார்க்கலாம். மநு சொல்கிறான் “மருத்துவர்கள் தரும் உணவு புண்ணிலிருந்து வரும் சீழுக்குச் சமம்”.

இந்த தர்மச்சட்டங்களே இந்தியாவில் அதிகாரத்தில் இருந்தவர்களால் பெரும்பாலான காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் தான் ஆதியில் பெரும் அறிவுத்துறையாக வளர்ந்த இந்திய மருத்துவத் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனாலும் இதற்கு எதிரான தத்துவ மரபு கொண்டவர்களும் எளிதில் வீழ்ந்துவிடவில்லை.

ஏனென்றால் வலியால் துடிப்பவன் மருந்தைத் தேடித்தான் ஓடுவானே தவிர மந்திரத்தை தேடியல்ல. எனவே மருத்துவனை நோக்கி மக்கள் ஓடியபடியேதான் இருந்தனர். மருத்துவ அறிவு மதவாதிகளுக்கு எதிராக தன்னை தக்கவைக்கிற போராட்டத்தை நடத்தியபடியே இருந்தது.

இந்தியாவின் தென்புலத்தில் தமிழர்மரபு சுமார் அறுநூறு ஆண்டு பரப்பினைக் கொண்ட சங்ககாலம் முழுவதும் இயற்கையை புரிந்து கொள்ளவும், அதன் ஆற்றலை கற்றுக் கொள்ளவும், இயற்கைக்கும் மனித வாழ்வுக்குமான உயிரோட்டமான தொடர்பை விளங்கிக் கொள்ளவுமான தத்துவமரபை வளர்த்தெடுத்து வைத்திருந்தது.

அதனால்தான் நோய்நாடும் முன் நோயின் முதன்மை காரணத்தை கண்டறியும் பகுத்தறிவு இங்கு வளர்த்தெடுக்கப்பட்டது. மருந்தனெப்படுவது வேண்டாவாம் என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கத்துவங்கியது. தனக்கென்ற தனித்துவமான மருத்துவ முறையை அது உருவாக்கிக் கொண்டது. பல்லாயிரம் செடி கொடிகளின் பேரறிவை தனது இலக்கியம் எங்கும் அது பதிவு செய்துவைத்தது.

ஆனால் ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் வைதீகக்கோட்பாடே தமிழக அரசியல் அதிகாரத்தில் கோலோச்சியது. அது பாரம்பரிய மருத்துவ அறிவின் மீதான தாக்குதல் தொடுத்தது. முளைவிடும் ஒவ்வொரு மூலிகை இலையும் மாயாவாதத்துக்கு எதிராகத்தான் தழைக்க வேண்டியிருந்தது. அதனால் தான் இந்த மண்ணில் மருத்துவத்தை இறுகப்பிடித்த சித்தமரபு வைதீகத்துக்கு எதிரான போர்க்குரலை தனது அடையாளமாகக் கொண்டது. மருத்துவ அறிவு தழைக்க வர்ணக்கோட்பாடும், வைதீக சிந்தனையும் ஒழிய வேண்டும் என்பதே சித்தர்கள் கண்ட அறிவியல் உண்மை. அதனால் தான் காய்ச்சலுக்கும் இருமலுக்கும் மருந்தை காய்ச்சிக் கொண்டிருக்கையிலே அவர்களின் வாய் “பறச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா?” என முழங்கியது. “ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்” என நம்மை காறி உமிழ்ந்தவனைப் பார்த்து அவர்கள் காறி உமிழ்ந்தனர். தாவாரம் இல்லாதவனுக்கு தேவாரம் ஏதுக்கடா என நெற்றிப்பொட்டில் சொல்லால் அடித்தனர்.

தனக்கென்ற தனித்த அறிவியலையும், தத்துவத்தையும் இறுகப்பிடித்திருந்ததால் தான் சித்தர் மரபு எளிதில் வீழ்த்தமுடியாததாக நிலைபெற்றது. இந்திய மருத்துவ மரபில் வேறு எதிலும் இல்லாத அளவு கனிம, உலோக அறிவினைக் கொண்டு வளர்ந்த மருத்துவ முறையாக அது பரிணமித்தது.

இது நவீன அலோபதி மருத்துவத்தின் ஆரம்பக் கூறுகளுக்கு இணையான பயணவெளி. அதனால் தான் சரஸ்வதி மஹால் நூலகத்தின் மருத்துவம் சார் மூல ஏடுகளை 1869இல் அட்டவணைப்படுத்தி மூன்று தொகுதிகளாக லண்டனில் வெளியிடப்பட்ட போது பல மூல ஏட்டுச்சுவடிகள் ஜெர்மனுக்கு கொண்டுசெல்லப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. அதை மறுப்பதற்கு இல்லை, அதற்கான வாய்ப்பிருந்தது என்று பின்னால் வந்த அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளதைப் பார்க்கிறோம். காலனிய ஆட்சியின் ஆரம்ப நாட்களின் கண்மருத்துவத்துக்கு இங்கு இருந்த பாரம்பரிய வைத்தியமுறை மிகச்சிறப்பானது என்பதை ஏற்று ஆணைபிறப்பித்ததைப் பார்க்கிறோம்.

அதேபோலத்தான் மருத்துவம்சார் மரபு வலிமை கொண்டிருந்ததால் தான் நவீன மருத்துவம் பற்றி ஆசிய மொழியில் எழுதப்பட்ட முதல் நூலாக தமிழ் நூற்கள் திகழ்கின்றன. டாக்டர் சாமுவேல் கிறீன் இரண வைத்தியம், மருத்துவ வைத்தியம், கெமிஸ்தம் உள்ளிட்ட பல நூல்களை 1850 களிலே எழுதினார். அலோபதி மருத்துவத்தை தமிழ் வழியில் கற்றுக் கொடுக்கும் கல்விச்சாலைகளும் உருவாக்கப்பட்டன.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு 24 மருத்துவக்கல்லூரியை அரசே நடத்தும் மாநிலமாக தமிழகம் இருப்பது தற்செயல் அல்ல, தனக்கென்ற தனித்த மருத்துவ மரபை, பகுத்தறிவுப் பார்வையை, தத்துவக்கண்ணோட்டத்தை, வைதீகத்துக்கு எதிரான போர்க்குணத்தைக் கொண்டதொரு மாநிலத்தின் அடையாளம் தான் இது.
13 ஆண்டுகள் முதல்வராக இருந்த மோடி குஜராத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியைக் கூட உருவாக்காததும் தற்செயல் அல்ல, அதுவும் வர்ணக்கோட்பாட்டுக்கு மண்டியிட்ட ஒரு வரலாற்றின் அடையாளம்தான்.இப்பொழுதும் அதே வரலாறு தான் நீடிக்கிறது. மருத்துவர்களை நோக்கி மக்கள் பாய்ந்து போவதால் அவர்களின் மீது கடும் தாக்குதலை அன்று நடத்தியவர்கள், இன்று வேறுவிதத்தில் அத்தாக்குதலை நடத்துகின்றனர். சமூகத்தின் பெரும்பான்மையோரை மருத்துவத்தில் இருந்து வெளியேற்றும் உத்திகளுக்கு அவர்கள் மாறியுள்ளனர்.

இவர்களின் கொள்கைக்கு எதிராக இருப்பவர்கள் தேவனாக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி, அஸ்வினாக இருந்தாலும் சரி, அனிதாவாக இருந்தாலும் சரி அவர்கள் இரக்கமின்றி அப்புறப்படுத்தப்படுவார்கள்.

இம்மண்ணின் மருத்துவ அறிவினை காக்கும் போராட்டம் அன்றும் இன்றும் ஒரே எதிரியோடுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதை நடத்துவதில் அன்றுபோல் இன்றும் முன்னணியில் தமிழகமே இருக்கிறது.

Venkatesan Su:
Via- Sundar Rajan (poovulagin nanbargal)

Monday 4 September 2017

Neet:

பேராசிரியர் அணில் சடகோபன் அவர்களின் உரைப்படி (லிங்க் : http://www.vikatan.com/news/coverstory/90047-this-is-the-connection-between-neet-exam-and-wto-imf-speaks-professor-anil-sadgopal.html)  நீட் தேர்வின் சர்வதேச அரசியலுக்கு எதிராக இந்திய தேசம் முழுவதும் எதிர்ப்பு எழுந்திருக்க வேண்டும்.

ஆனால் தமிழகம் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, கல்வி, பெரியாரிய கொள்கைகள், திராவிட கட்சிகள் அதன் சமூக நீதி காரணமாக இருக்கிறது.
இதில் கல்வி என்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஆனால் சமூக நீதி, பெரியாரிய கொள்கைகள், போன்றவற்றை மாணவர்களுக்கு கற்பித்தலில் ஆசிரியர்களின் பங்கு என்ன என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

உதாரணத்திற்கு எனக்கு சமூகநீதி என்பதன் அர்த்தமே நான்  கல்லூரி முடித்து பொது புத்தகங்களில் கற்றுக்கொண்டதுதான். என் நண்பர்களுக்கும் அதுவே, சிலர்க்கு இடஒதுக்கீடு குறித்த புரிதல் இன்றும் இல்லை.

நாம் இன்று அடைந்திருக்கும் நெருக்கடிக்கு மக்களின் ஒட்டு மொத்த எதிர்ப்புகள் வராததன் காரணமும் இதுதான்.
பாடப்புத்தகத்தை தாண்டி மாணவர்களுக்கு,  சமூக நீதியின் வரலாற்றையும், இடஒதுக்கீட்டின்  முக்கியத்துவத்தையும், கற்பிப்பதன் அவசியத்தை ஆசிரியர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
சாதியும்,மதமும் மக்களை பிரித்தால செய்யும் சூழ்ச்சி என்பதை உணர்த்தியிருக்க வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் (CBSC உட்பட) பசங்க படிக்கிறது எல்லாம் தெண்டம், தனியார் நீட் கோச்சிங் கிளாஸ் போய் வாங்குகின்ற மதிப்பெண்கள் தான் மருத்துவ படிப்பிற்கு அவசியம் என்கிற அறிவிப்பிற்கு நியாயப்படி "ஆசிரியர்களுக்கும்" கோபம் வரணும்! குறைந்தபட்சம் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாவது செய்திருக்கலாம்.

சம்பள உயர்விற்க்கு போராடும் ஆசிரியர் சங்கம், நீட் எதிர்பிற்க்கு குரல் கொடுக்காமல் இருப்பது ஏன்??

மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாத உங்களிடம் இருந்து அவர்கள் என்ன கற்றுக்கொள்ள போகிறார்கள்? நீங்கள் கற்றுக்கொடுக்கும் கல்வி என்ன சமூக தாக்கத்தை அவனிடத்தில் ஏற்ப்படுத்தும் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை!

ஆக, மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் ஒருபுறம் இருக்க, இதில் ஆசிரியர்களின் பங்களிப்பும் முக்கியமென கருதுகிறேன்!

#ஆசிரியர்தினவாழ்த்துகள்

Sunday 2 August 2015

கூடங்குளம்: அணு அரசியல்! (மினி தொடர் பகுதி-2) (by vikadan)

‘கியூபா தேசத்தாய்க்கு தனது குழந்தைகள் பிரகாசமான எதிர்காலத்தை பார்ப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும், அதற்கான வெற்றியானது லட்சக்கணக்கான மனித உயிர்களைக் கொன்று அழிக்கும் அணு குண்டில் இருந்து பெறப்படுவதாக இருக்காது’- சே குவேரா

உலகம் முழுவதிலும் உள்ள அறிவியல் அறிஞர்களுக்கு அணுசக்தி குறித்த சிந்தனையை தூண்டிவிட காரணமாக இருந்தது, இரண்டாம் உலகப் போர். ஜெர்மனிக்கு எதிரான அந்த போரில், ஹிட்லரின் படைகள் அணு குண்டு பயன்படுத்தும் என்ற அச்சம் அமெரிக்கப் படைகளுக்கு ஏற்பட்டது. அதனால் தாங்களும் அணு குண்டு தயாரிக்க வேண்டும் என்றும் அதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும் என்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அப்போதைய அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதினார். 

அதன் பின்னரே அணுக்களை பிளவுபடுத்தும் ஆய்வுகள் உலக அளவில் அதிகரிக்க தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகஷாகி நகரங்கள் மீது அணு குண்டு வீசப்பட்டு லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டது எல்லாம் வரலாறு. 

அணு குண்டின் பாதிப்பை நேரில் பார்த்த பின்னர், அணு குண்டு தயாரிக்க காரணமாக இருந்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வருந்தியதையும் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. உலக நாடுகளின் பார்வை அணு சக்தியில் பதிய காரணம், அணு குண்டு வைத்திருக்கும் நாடுகள் மட்டுமே வல்லரசு நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னையும் வல்லரசாக காட்டவாவது அணு சக்தியில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டது. 

அதனால் வளர்ந்த நாடுகளுக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்தாவது அணு சக்தி குறித்த ஆய்வை மேற்கொள்ள முண்டியடித்துக் கொண்டு முன்வந்தன. இதில் இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.

அதனால், அமெரிக்காவிடம் இருந்து அணு சக்தி தொழில்நுட்பங்களை பெற்று மின்சக்தியை உற்பத்தி செய்ய இந்தியா முடிவு செய்தது. அதன்படி, நாட்டின் பல இடங்களில் அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த அணு உலைகளில் இருந்து பெறப்படும் கழிவுப் பொருளில் இருந்து அணு குண்டுகளை தயாரிக்க முடியும். ஆனால், இந்தியாவுக்கு அந்த தொழில்நுட்பம் தெரியாது என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பலவும் இந்தியாவுடன் அணுஉலைகளுக்கான ஒப்பந்தங்கள் செய்வதில் ஆர்வம் காட்டின.

கூடங்குளத்தில் அணு உலை

இந்தியாவின் தாராப்பூர் நகரில் அமைக்கப்பட்ட அணு உலைக்கு தேவையான எரிபொருளான யுரேனியத்தை அமெரிக்கா விற்பனை செய்து வந்தது. இதற்காக இரு நாடுகளுக்கும் இடையே வணிக ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருந்தது. இந்த நிலையில், 1974 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி காலத்தில் போக்ரானில் முதன் முதலாக அணு குண்டு சோதனையை இந்திய விஞ்ஞானிகள் நடத்தினார்கள். இதனை அறிந்ததும் அமெரிக்கா ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றது.
‘நாங்கள் உங்களுக்கு எரிபொருள் கொடுத்ததே அணு உலைகளை அமைத்து மின் உற்பத்தி செய்ய மட்டும் தான். ஆனால், எங்களை கேட்காமல் அணு குண்டு தயாரித்து சோதனை செய்து பார்த்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இனிமேல் உங்களுக்கு அணு உலைக்கான எரிபொருள் சப்ளை செய்ய மாட்டோம்’ என கறார் காட்டியது. இந்தியாவின் பல இடங்களில் யுரேனியம் கிடைத்த போதிலும், பிற தாதுப்பொருட்களுடன் இருக்கும் அதனை தனியாக பிரிக்கும் தொழில்நுட்பம் வேறு நமக்கு தெரியாது. 

கோடிக்கணக்கில் முதலீடு செய்த அணு உலைகளின் இயக்கத்தை முடக்கும் விதத்தில் அமெரிக்கா செயல்படுவதை எப்படி முறியடிப்பது என இந்திய விஞ்ஞானிகள் விழிபிதுங்கி நின்றனர். பின்னர், ‘எதிரிக்கு எதிரி நண்பன்!’ என்கிற கொள்கை முடிவை எடுக்க மத்திய அரசாங்கம் முடிவெடுத்தது. 

அதன்படி, அப்போது அமெரிக்காவுக்கு சவாலாக திகழ்ந்த சோவியத் யூனியனுடன் கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அந்த நாட்டின் உதவியுடன் அணு உலைகளின் செயல்பாட்டை தொடரவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 1979ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரான மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவை கூடி சோவியத் யூனியனுடன் அணுசக்தி தொடர்புகளை வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சோவியத்துடன் வர்த்தகம், தொழில்நுட்பம், அறிவியல், கல்வி என இந்தியாவின் நெருக்கம் அதிகரித்தது. 1988ல் சோவியத் குடியரசின் அதிபரான மிகைல் கார்பசேவ் மற்றும் இந்தியாவின் அப்போதைய பிரதமரான ராஜீவ்காந்தி இடையே புதிய அணு உலைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதில், நாட்டின் தென்கோடிப் பகுதியான கூடங்குளத்தில் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் கூடிய இரு அணு உலைகள் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் குறித்து அறிந்ததும் கூடங்குளம் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் மட்டும் அல்லாமல் குமரி மாவட்ட மக்களும் கொந்தளிக்க தொடங்கினர். காரணம், இந்த அணு உலைகளை குளிர்விப்பதற்காக குமரி மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமான பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு இருந்ததே. 

அணையில் இருந்து தண்ணீர் கொண்டு சென்றால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் குமுறினர். அதே சமயம், அணு உலையை குளிர்வித்த பின்னர் வெளியாகும் சூடான தண்ணீரை கடலுக்குள் விடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
இப்படி செய்தால் சுற்றுப்புறப் பகுதிகளில் மீன்வளம் முழுமையாக அழியும் என்றும் தங்களுக்கு தெரிந்த ஒரே தொழிலான மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் மீனவர்கள் எச்சரித்தனர். நெல்லை, குமரி மாவட்டங்களை பாதிக்கும் இந்த விவகாரத்தை கண்டித்து பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் என எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியது. முக்கிய அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் பலவும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடத் தொடங்கின. இந்த சூழலில் ஒப்பந்தம் போடப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு 1989ஆம் வருடம் மே மாதத்தில் குமரி மாவட்டத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இரு மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இதில் கலந்து கொண்டனர். கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றதன் மூலம் மக்களின் அதிருப்தி அதிகமாகி இருப்பதை அரசு புரிந்து கொண்டது. போலீஸாரை குவித்து கூட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ஆக்ரோஷமாக இருந்த மக்கள் அணு உலை அமைக்க மாட்டோம் என அரசாங்கம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். இதனால் துப்பாக்கிச் சூடு நடத்தியே போலீஸாரால் கூட்டத்தை கலைக்க வேண்டியதாகிப் போனது.
அதன் பின்னர், இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் தோன்றின. கம்யூனிச கூட்டமைப்பாக இருந்த சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்து சிதறியது. இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இந்த நிகழ்வுகள் கூடங்குளம் அணு உலை விவகாரத்திலும் எதிரொலித்தது. இரு நாடுகளுமே தங்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தயக்கத்தால் அதனை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். 

சில ஆண்டுளுக்கு பிறகு இந்த திட்டம் மறுபடியும் தூசு தட்டப்பட்டது. அப்போது மக்களிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டு இருந்தது. அதன் பின்னணியில் இருந்த அரசியல் எது?
அரசியல் தொடரும்....
- ஆண்டனிராஜ்

படங்கள்: 
எல்.ராஜேந்திரன்

கூடங்குளம்: அணு அரசியல்! (மினி தொடர்: பகுதி-1) (by vikadan)

ண்மை எப்போதும் எளிமையில் இருந்தே கண்டறியப்பட வேண்டும். குழப்பத்தில் இருந்து அல்ல! - சர். ஐசக் நியூட்டன்.

மனிதனின் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் ஏதோவொரு நுண் அரசியல் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தனி மனிதர்கள், குழுக்கள், இனங்கள் என அனைத்து மட்டத்தையும் அரசியல் ஆட்டிப்படைத்து வருகிறது. சாதாரண கண்களுக்குப் புலப்படாத, மிக நுண்ணிய அணுவிலும் அரசியல் புகுந்து, உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. அணு சக்தி குறித்த ஆய்வை யார் செய்ய வேண்டும் என்பதைக்கூட சர்வதேச நாடுகள் தீர்மானிப்பதில் இருந்தே இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ள முடியும்.
அணு சக்தி என்பது எளிமையானது, சிக்கனமானது, பாதுகாப்பானது, மொத்தத்தில் மக்களுக்கானது என்றால் அதில் எதிர் கருத்துக்கள் ஏற்படுவது எதனால்? அணுவை பிளந்து மின்சக்தியை உருவாக்கும் அணு உலை நிலையங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. இந்த அணு உலைகளில் இருந்து ஆயிரக்கணக்கான மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றின் பலன் மக்களுக்கு நேரடியாகவே கிடைக்கத்தான் செய்கிறது. இப்படி மக்களுக்கு பயன் தரக்கூடிய ஒரு சக்தியை எல்லோரும் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்?

அப்படியானால், அணு சக்தி கொள்கையை உலக நாடுகள் வகுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? வடகொரியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை மட்டும் அணு ஆய்வுகளை செய்யவிடாமல் தடுப்பதன் மர்மம் என்னவாக இருக்க முடியும்? அணுசக்தி துறையில் உயர்ந்து நிற்கும் நாடுகளை மட்டும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற வைப்பதன் பின்னணியில் இருக்கும் அரசியல் எது? இப்படி விடை தெரியாத கேள்விகள் ஏராளம்.
 
உலகம் முழுவதும் 437 அணு உலைகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இதன் மூலமாக 3,80,250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர, 66 அணு உலைகள் விரைவில் செயல்படும் வகையில், அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 99 அணு உலைகள் இயங்குகின்றன. இதன்மூலமாக, அந்நாடு 98,792 மெகாவாட் மின்சக்தியை இப்போதும் உற்பத்தி செய்துகொண்டு இருக்கிறது.

ஃபிரான்ஸ் 58 அணு உலைகளையும், ஜப்பான் 43 அணு உலைகளையும், ரஷ்யா 34 அணு உலைகளையும், சீனா 26 அணு உலைகளையும் கனடா 19 அணு உலைகளையும் கொண்டிருக்கின்றன. பக்கத்து நாடான பாகிஸ்தான் 3 அணு உலைகளை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இந்தியா 21 அணு உலைகளில் இருந்து 5302 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. உலகம் முழுவதும் ஏறக்குறைய 29 நாடுகள் அணு உலைகளை அமைத்து மின் உற்பத்தியை பெற்று வருகின்றன. இது தவிர, பல்வேறு நாடுகளில் இப்போதும் அணு சக்தித் துறை சார்ந்த ஆய்வுகள் மிகத்தீவிரமாக நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.  

இப்படி அனைத்து நாடுகளும் அணுசக்தி துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் அதீத அக்கறை காட்டி வரும் சூழலில், அதற்கான எதிர் குரல்களும் ஓங்கி ஒலிக்கவே செய்கின்றன. எல்ல நாடுகளின் ஆட்சியாளர்களும் அணு சக்தி துறையை மேம்படுத்த கூடுதல் திட்டங்களை வகுத்து வருகிறார்கள். அதற்கு சற்றும் குறைவு இல்லாமல் அணு சக்தி எதிர்ப்பாளர்கள், சுற்றுச்சூழலில் அறிஞர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து அணு உலைகளை மூடக் கோரி போராடி வருகிறார்கள்.

அணு சக்திக்கு ஆதரவும் எதிர்ப்பும் பலமாக இருப்பது ஏன்? அணு சக்தி ஆக்கபூர்வமானது என்றால் அதனை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? உலகின் பல நாடுகள் மக்களின் தீவிர எதிர்ப்புக்கு பயந்து அல்லது கொள்கை முடிவை வகுத்து அணு உலைகளை மூடிக்கொண்டு இருக்கின்றனவே? வளர்ச்சி அடைந்த நாடுகள் அணு உலைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூடுவதற்கு முடிவு செய்திருக்கும் சூழலில், மூன்றாம் உலக நாடுகள் அணு உலைகளை அதிகமாக தொடங்க முடிவு செய்வது எதற்காக? வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவும் மூன்றாம் உலக நாடுகளில் அணு உலைகளை அமைத்து கொடுக்க ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன?
 
அணு உலைகளை படிப்படியாக மூடிவிட்டு,  மாற்று மின்சக்தி திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம் என தங்கள் மக்கள் மீது அக்கறை காட்டும் சில நாடுகள்,  அடுத்த நாடுகளில் அணு உலைகளை அமைக்க முழு ஒத்துழைப்பையும் தொழில் நுட்பத்தையும் கொடுத்து உதவுகின்றன. ‘அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னி... தனக்கு வந்தால் ரத்தம்..!’ என்கிற மனநிலையில் வளர்ச்சி அடைந்த நாடுகள் செயல்படுவதன் பின்னணியில் இருப்பது அரசியல்... 

சாதாரண நாடுகளுக்கு உள்ளேயும் புகுந்து குழப்பங்களை ஏற்படுத்தி வரும் சர்வதேச அரசியல் பற்றி அறிந்து கொள்ளாமல் அணு சக்தி நல்லதா, கெட்டதா என்கிற விவாதம் முழுமை பெறாது. இந்தியாவிலும் அணு உலைகளுக்கு எதிராக கலகக்குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கும் காலகட்டம் இது! குறிப்பாக, கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது.
இந்தியாவில் அணு சக்தி குறித்த மறு விவாதத்தை தூண்டி இருக்கும் இந்த போராட்டம் பற்றி தொடர்ந்து விவாதிப்போம்...
 
- அரசியல் அறிவோம்

- ஆண்டனிராஜ்

படங்கள்: 
எல்.ராஜேந்திரன்

Saturday 11 April 2015

'ஓகே கண்மணி' பாடல்கள் உருவான விதத்தை பகிரும் ரஹ்மான் : நன்றி தி இந்து

'ஓ காதல் கண்மணி' படத்தின் ஒவ்வொரு பாடலும் எப்படி உருவானது என்று அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓ காதல் கண்மணி' திரைப்படம் ஏப்ரல் 17ம் தேதி வெளியாக உள்ளது. துல்ஹர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
'ஓ காதல் கண்மணி' படத்தின் பாடல்கள் உருவான விதம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது:
"ஓகே கண்மணி ஒரு இளமையான திரைப்படம். எனவே படத்தின் இசையும் அதற்கு ஏற்றார்போல உற்சாகமானதாக இருக்க வேண்டும். மணிரத்னம் எப்போதும் எனக்கு ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்துவிடுவார். எனக்கு முழு சுதந்திரம் தந்துவிடுவார். இந்தப் படத்தைப் பொருத்தவரையில், அதன் அலைவரிசைக்கு நெருக்கமாக இசை இருக்க வேண்டும் என நினைத்தேன். அவரது எண்ணங்களில் இளமை இன்னும் மாறவில்லை என்பதை நீங்கள் காணலாம்.
அதே போல வைரமுத்து அவர்களும். அவரது எழுத்தில் பாரம்பரியம் தெரியும், அதே நேரத்தில் தனக்கே உரிய தனித்துவ பாணியில் அவர் பல நிலைகளில் முன்னால் உள்ளார்.
இசையில் வரிகள் எப்படி வந்து உட்காரும் எனத் தெரியாது. ரசாயன மாற்றம் போல நிகழும். இன்றுவரை நாங்கள் மூவரும் இணையும்போது, எப்போதும் போல உற்சாகம் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம்.
மென்டல் மனதில்
எப்போதுமே இந்த மாதிரியான பாடல் வேண்டும் என்ற நிலையில் நாங்கள் மூவரும் உட்கார்ந்து விவாதிப்போம். ஆனால் இந்தப் பாடல் விவாதத்தின்போது வைரமுத்து சென்னையில் இல்லை. எனக்கும் வெளிநாடு போக வேண்டிய வேலை இருந்தது. அதற்குள் கண்டிப்பாக இந்தப் பாடலை முடித்துவிட வேண்டும் என்று நானும், மணிரத்னமும் நினைத்தோம். படப்பிடிப்பும் இருந்ததால், நாங்களே எழுதிவிடலாம் என்று உட்கார்ந்தோம். முதலில் முழுமையான வரிகள் இல்லை. இசைக்கு ஏற்றவாரு அவர் ஒரு வார்த்தை நான் ஒரு வார்த்தை என சொல்ல, கடைசியில் அவற்றை ஒழுங்குபடுத்தி பாடலை முடித்தோம்.
மன மன மன என மீண்டும் மீண்டும் வரும் வார்த்தைகளை வைத்துக் கொள்ளலாம் என்று நான் உத்தேசித்தேன். மென்டல் என்ற வார்த்தையை மணி தான் சொன்னார். அதை முன்னால் இருக்கட்டும் என்று மாற்றினோம். இன்று மட்டும் ராஜா ராணி என முதலில் இருந்தது. முதலில் மென்டல் என்ற ஆங்கில வார்த்தை வந்துவிட்டதால், இதுவும் ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் என கிங் அண்ட் குயினா என மாற்றினோம்.
மலர்கள் கேட்டேன்
பாட்டுக்காக மெட்டமைத்தேன். 3 வகையான வரிகளைத் தந்தார். அதில் எனக்கு மலர்கள் கேட்டேன் பிடித்திருந்தது. கர்னாடக இசைப் பாடகி பாத்திரம் ஒன்று பாடுவது போல சூழல். சித்ரா மிக அருமையாக பாடியிருந்தார். பாடலின் முடிவில் ஒரு ஆண் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. நான் டிராக் பாடியிருந்தேன். அதுவே நன்றாக இருந்ததால், அப்படியே பாடலிலும் சேர்த்து விட்டோம்.
சினாமிகா
ஒரு மெட்டைத் தந்திருந்தேன். மணிரத்னமுக்கு அது பிடித்திருந்தது. எனவே அதை வைத்து வரிகள் உருவானது. புதிதாக ஒரு வார்த்தையை உருவாக்கலாம் என நினைத்தோம். சினம் கொண்ட ஒரு பெண், என சினாமிகா என்ற வார்த்தையை உருவாக்கினோம். அப்படியே அனாதிகா என்ற வார்த்தையும் உருவானது. அந்தப் பாடலை முடிக்கதான் நிறைய நேரம் ஆனது. பாடல் மிகவும் மென்மையாக இருந்ததால், பாடலில் இன்னும் உற்சாகம் தேவை, என்றென்றும் புன்னகை பாடலைப் போல இருக்கலாம் என மணிரத்னம் விரும்பினார். அப்படியே பாப் பாடல்களைப் போன்ற அம்சங்களை சேர்த்தோம். பாடலை முடிக்க 2 மாதங்கள் ஆனது. ஒரு குறிப்பிட்ட டிரம்ஸ் ஒலி வரவேண்டும் என மெனக்கெட்டதில் அதற்கே 5 நாட்கள் ஆனது. டிரம்ஸ் ஒலிக்காக மட்டும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வின்சென்ட் என்ற கலைஞர் வாசித்து அனுப்பினார்.
ஆட்டக்காரா
இந்தப் படத்துக்காக நாங்கள் உட்கார்ந்தபோது, முதல் ஒரு சில மாதங்களில் வந்த மெட்டு அது. வழக்கமான பாடலைப் போல் இருக்கக் கூடாது என்பதால் நிறைய யோசனைகள் இருந்தன. ஒரு 15 நிமிட பாடலை சுருக்க வேண்டும். பாடலில் ராப் பகுதி முதலிலேயே முடிந்துவிட்டது. மணிரத்னம் ஆட்டக்காரா என எழுதினார், காரா என நான் முன்னால் ஒரு வார்த்தையை சேர்த்தேன்.
தீரா உலா
படப்பிடிப்பு முடிந்தவுடன் காட்சிகளைப் பார்த்து இசையமைத்த பாட்டு இது.
பறந்து செல்ல வா
ஒரு அறையில் இருவரும் பாடுவது போல் இருக்கவேண்டும் என்பதால் வெறும் குரல்கள் மட்டும் போதும் என சொன்னார். அப்போது, ஐ பேடில் ஒரு செயலி இருப்பதைப் பற்றி சொன்னேன். நாம் என்ன பேசினாலும், பாடினாலும், இசைத்தாலும், அது பதிவாகி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்தியா, மேற்க்கத்திய நாடுகள் என பல இசைக் கலைஞர்கள் இதை பயன்படுத்துகிறார்கள். ஒரு புதிய ட்ரெண்ட் போல. அதை முயற்சி செய்யலாமா என யோசனை சொன்னேன். பாடகர் கார்த்திக்கை பாடவைத்தோம். என்னிடம் சில வார்த்தைகளின் பட்டியல் இருந்தது, அதை வைத்து அப்படியே பாடி பாடி இதை உருவாக்கினோம். பாடலை கேட்ட பிறகு மணிரத்னம் சில திருத்தங்களைச் சொன்னார். அதை வைத்து மீண்டும் ஒரு முறை ஒலிப்பதிவு செய்து பாடலை முடித்தோம்.
மவுலா
என் மகன் பாடியது. தனிப்பட்ட உபயோகத்துக்காக மகன் அமீனை வைத்து இந்தப் பாடலை ஏற்கன்வே ஒலிப்பதிவு செய்திருந்தேன். மணிரத்னம் ஒருநாள் எதேச்சையாக அதைக் கேட்டார். யார் குரல் இது எனக் கேட்டார். எனது மகன் என்று கூறினேன். எனக்கு இந்தப் பாடல் வேண்டும் என்றார். முதலில் தனியாக அந்தப் பாடலை வெளியிடலாம் என்ற யோசனை எனக்கிருந்தது. நண்பர்களுக்குள் மட்டும் பகிர்ந்திருந்தேன். இவர் கேட்டவுடன் என்னால் மறுக்க முடியவில்லை. எப்படி இதை பயன்படுத்துவீர்கள் எனக் கேட்டேன். நான் அதை பார்த்துக் கொள்கிறேன். என்றார். என்னை அறிமுகம் செய்தது போல மவுலாவில் மணிரத்னமே என் மகனையும் அறிமுகம் செய்கிறார். வாழ்க்கை ஒரு முழு சுற்று வந்தது போல.
தமிழில் சரியான வரிகள் பொருந்திப் போக அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். தெலுங்கில் டப்பிங் செய்யப்படும்போது அவர்களுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது. முழு பாடலும் கைவசம் இருக்கும். ஓகே கண்மணியைப் பொருத்தவரை சில பாடல் வரிகள் தமிழை விட தெலுங்கில் நன்றாக இருக்கிறது. குறிப்பாக நானே வருகிறேன் பாடல்." என்று பேசியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்